உலகம் மாயை

‘உலகமே மாயை!’ என்றார் ஒரு ஜென் ஞானி.

‘அப்படியா? நிச்சயமாகதான் சொல்கிறீர்களா?’ அந்த நாட்டின் அரசன் கேட்டான்.

‘ஆமாம். நன்றாக யோசித்தபிறகுதான் சொல்கிறேன். உலகமே மாயை!’

சரேலென்று தன்னுடைய வாளை உருவினான் அரசன். ‘இப்போதே உங்களைக் கொன்றுவிடப்போகிறேன்’ என்று அவரது கழுத்தில் கத்தியை வைத்தான்.

‘அச்சச்சோ, என்னைக் கொன்னுடாதேப்பா!’ ஜென் ஞானி கதறினார். ‘உலகம் மாயை இல்லை. ஒத்துக்கறேன்!’

’சபாஷ்’ அரசன் பெருமிதத்தோடு கத்தியை உறையில் போட்டான். ‘இப்போதுதான் நீங்கள் எதார்த்தமாகப் பேசுகிறீர்கள். இந்த உலகம் மாயை இல்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி!’

‘யார் சொன்னது? இந்த உலகம் மாயைதான்!’ என்றார் ஜென் ஞானி.

‘இப்போது நான் கத்தியைக் காட்டியபோது வேறுவிதமாகச் சொன்னீர்களே!’

‘கத்தி முனையில் நான் அப்படிதான் சொல்வேன்’ என்றார் அவர். ‘ஆனால் அந்த ஆபத்து நீங்கியபிறகு, அதுவும் மாயைதான் என்பது புரிகிறது. ஆகவே அடித்துச் சொல்கிறேன், உலகம் மாயைதான்!’

’நான் மீண்டும் கத்தியை உருவினால்?’

‘அப்போது மறுபடி உலகம் மாயை இல்லை என்று சொல்வேன். ஆனால் உயிர் பயத்தில் நான் அப்படிச் சொல்வதுகூட ஒரு மாயைதான்!’

No comments:

Post a Comment