சின்ன

சின்னச் சின்ன துவக்கம்தான் பெரிய வெற்றிக்கு அடித் தளமாகும்.

இரண்டு கைகளால் அணைத்துப் பிடிக்க முடியாத மரம் சிறிய குருத்தாகத் தான் வளர்கிறது.

ஆயிரம் மைல் பயணம் எடுத்து வைக்கும் முதல் அடியிலிருந்து தான் துவங்குகிறது.

பதினான்கு மாடிக்கட்டம் கைப்பிடி அளவு மண்ணிலிருந்துதான் உருவாகிறது.

மரங்கள் ஒவ்வொன்றும் சேர்ந்துதான் தோப்பாகிறது.

எழுத்துக்கள் சேர்ந்துதான் வார்த்தையாகின்றது.

வார்த்தைகள் சேர்ந்தால்தான் நூலாகின்றது.

நூல்கள் சேர்ந்தால்தான் நூலகமாகிறது.

நூல் இழைகள் சேர்ந்தால்தான் ஆடையாகிறது. அந்த ஆடைதான் மானங்காக்கிறது.

ஆழ்ந்து சிந்திக்கும்போதுதான் சின்னச் சின்ன துவக்கத்தின் மகிமை புரியும். எந்தச் செயலும் தாமாக நிகழ்வதில்லை. நாம் உயிர் வாழ வேண்டுமானால் நாம்தான் சுவாசித்தாக வேண்டும். நாம்தான் உணவு உண்ண வேண்டும். நமக்காகப் பிறர் செய்ய முடியாது. அதைப்போல் எந்தச் செயலையும் நாம்தான் துவக்க வேண்டும். முன் கூட்டியே திட்டமிட வேண்டும். முதலில் செய்யப்போகும் செயலை மனக் கண்ணால் பார்க்க வேண்டும். பிறகு ஒரு தாளில் எழுத வேண்டும். அப்போதுதான் செய்ய வேண்டிய காரியங்கள் ஒவ்வொன்றும் தென்படும். அதிலிருந்து ஒரு தெளிவு பிறக்கும்.

சரி. எல்லாம் முடிவாகிவிட்டது. எப்படித் துவக்குவது? என்ற கேள்வி பிறப்பது இயல்பே. குழப்பமே வேண்டாம். சின்னதாகத் துவக்குங்கள். சின்னதாகத் துவக்கும்போது ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் உடனே சரி செய்து விடலாம். இதனைத் தான் திருவள்ளுவர்.

"இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து''
என்கிறார்.

No comments:

Post a Comment